மழை மற்றும் குளிர் காலங்களில் பெண்களுக்கு முகத்தில் திட்டு திட்டாக தெரியும். சிலருக்கு அங்கங்கு தோல் வறட்சியாகவும் அழுத்தி தேய்த்தால் வெள்ளையாகவும் காணப்படும். இது பெரும்பாலும் முகத்தில் மட்டும் அல்லாமல், காய் கால்களிலும் சிலருக்கு இருக்கும்.
சாதாரண நாட்களில், நமது தோல் மற்றும் கூந்தல் ஆகியவற்றில் உள்ள “இன்டெக்ரல் லிப்பிட் லேயர்” என்ற படிமம் தான் முகம், மேனி மற்றும் கூந்தலில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாக்கிறது. குளிர்காலங்களில் இந்த படிமம் பாதிக்கப்படுவதால் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
குளிர்காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளும், அதை தடுக்க வழிகளையும் பார்க்கலாம்.
சருமத்தில் ஈரப்பதம் குறைவதால், பொதுவாக வயதானோர், மெனோபாஸ் என்று சொல்லக்கூடிய மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக சரும வறட்சி இருக்கும். நீங்கள் குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக ‘ஷவர் ஜெல்’ பயன்படுத்தலாம். குளித்து முடித்தவுடன், கொஞ்சம் ஈரம் இருக்கும்போதே மாய்ஸ்சரைசிங் கிரீம் பூசிக்கொள்வது நல்லது. உங்கள் மாய்ஸ்சரைசிங் க்ரீமின் pH அளவு 5.5 இருக்கவேண்டும்.
ஒரு சிலருக்கு குளிர்காலத்தில் நகங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் அடிக்கடி நகம் உடையக்கூடும். நகம் உடைவதற்கு, ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணமே தவிர, மாறும் சீசன் அல்ல. இரவு தூங்க செல்வதற்கு முன் – நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், வாஸ்லின் இவற்றில் ஏதாவது ஒன்றை நகத்தில் பூசிகொள்ளுங்கள், மறுநாள் பிரஷை வைத்து சோப்பால் கழுவுவது சிறந்தது. இது உங்கள் நகத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ளும்.
பனிக்காலங்களில், ஆரம்பத்தில் சருமம் பாதிக்கப்படும், இறுதியில் கூந்தலும் பாதிப்பிற்கு உள்ளாகும். இந்தக் காலகட்டத்தில், உங்கள் தலையில் உள்ள 90 சதவிகித முடி அதன் வளர்ச்சி பருவத்தில் இருக்கும். 10 சதவிகித முடி உறங்கிக் கொண்டிருக்கும். பனிக்காலம் முடிந்தவுடன், உறங்கிக் கொண்டிருக்கும் முடியின் சதவிகிதம் 40-50 என உயரும்போது முடி அதிகமாகக் கொட்டும்.
அதிக கெமிக்கல் கொண்ட ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிக்கு பயன்படுத்தப்படும் கண்டிஷனர்களில் இரண்டு வகை உண்டு – ‘ரின்ஸ் ஆப்’ மற்றும் ‘லீவ் ஆன்’. ரின்ஸ் ஆப் கண்டிஷனரை, கூந்தலில் தடவிய சில நிமிடங்களில் அலசிவிட வேண்டும். சிறிது ஈரப்பதம் இருக்கும்போது லீவ் ஆன் கண்டிஷனரைப் பூசி அப்படியே விட்டு விடுவது நல்லது.
பாத பராமரிப்பு – சந்தனம், மஞ்சள், மருதாணியை அரைத்து, பாதங்களில் தடவிவர வெடிப்புகள் மறையும். தினமும் இரவில் கிளசரின் தடவி, மறுநாள் காலையில் கழுவினால், ஒரே வாரத்தில் பாத வெடிப்புகள் மறைந்து விடும். இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பாதங்களில் தடவலாம்.
நன்கு ஊறவைத்த பாதாமை அரைத்து அதை இளஞ்சூடான பாலில் கலந்து, முகம் முழுவதும் பூசிவந்தால் சருமம் பளபளக்கும். அதுமட்டுமல்லாமல், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறைந்துவிடும். அல்லது, சந்தனத்தூள், ஜாதிக்காய்தூள் இவற்றைப் பன்னீருடன் கலந்து, கண்ணைச் சுற்றிப் பூசலாம். அல்லது, கொத்தமல்லிச் சாறுடன் வெண்ணெய் கலந்து, கண்களைச் சுற்றி பூசிவர, ஒரே வாரத்தில் கருவளையம் மறையும்.
இயற்கையான முறையில் சில டிப்ஸ் இதோ..
குளிக்கும் நீரில் 2-3 துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு குளிக்கலாம். குளித்தவுடன் வெண்ணெயோ, நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ உடலில் தடவிக்கொள்ளலாம். இது உங்கள் மேனியில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.
இளஞ்சூடான பாலை முகத்தில் தினமும் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து, கரும்புள்ளிகளின் மீது தடவி வந்தால் நல்ல பயன் தரும். அல்லது, துளசி, வேப்பிலை, மஞ்சள் கலந்து பருக்களின் மீது தடவலாம்.
உடலுக்குத் தேவையான 8 அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டையை முடியில் தடவத் தேவை இல்லை. முட்டையைப் பச்சையாக சாப்பிட்டால், முடிஅதிகம் கொட்டத்தொடங்கும். பச்சை முட்டையில் அவிடின் இருப்பதால், அது சருமத்திற்கும் முடிக்கும் மிக முக்கிய தேவையான பயோட்டினை அழித்துவிடும். வேகவைக்கும்போது அவிடின் அழிக்கப்படுவதால், பயோட்டின் பாதுகாக்கப்படும். அதனால் முட்டையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் முடி நன்றாக வளரும்.
வைட்டமின் H நிறைந்த வேர்க்கடலை, ஈஸ்ட், கோதுமை, மீன், முட்டை, அவகேடோ, கேரட், பாதாம், வால்நட், காலிஃப்ளவர் என இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
வேப்பிலை சேர்த்த நீரைக்கொண்டு கூந்தலை அலசலாம். இது உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மிளகு எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து, கூந்தலில் தடவி, பின்னர் சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டை 15 நிமிடங்கள் வரை தலையில் சுற்றிவைத்து இருக்கவேண்டும். பின்னர் தலைமுடியை நன்கு அலசவேண்டும். இதனால் கூந்தலுக்குப் பளபளப்பும் மென்மையும் கிடைக்கும்.
சிகைக்காய் மற்றும் பச்சைப் பயறு மாவை சேர்த்து, சாதம் வடித்த தண்ணீருடன் கலந்து, கூந்தலில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து அலசலாம். இது உங்கள் கூந்தலின் அடர்த்தியை கூட்டும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கூந்தலில் பேக் போட்டு சிகைக்காய் போட்டு அலசலாம்.
குளிர்காலங்களில் உங்கள் மேனியையும் கூந்தலையும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க இந்த இயற்கை குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு பலன்களை தரும்.